தேமுதிகவை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்.. விஜயகாந்த் ஆவேசம்
மதுரை: என் கட்சியையும், எனது தொண்டர்களையும் அழிக்க நினைக்கிறார்கள். யாராலும் எங்களை அழிக்க முடியாது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க.வின் தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் முஜிபூர் ரகுமான். இவரது மகள் சபினாவுக்கும்-ஷேக் அப்துல்லாவுக்கும் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று திருமணம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
''எனக்கு ஜாதி, மத பேதம் கிடையாது எம்மதமும் எனக்கு சம்மதம். எனக்கு இஸ்லாமியர்களிடம் நல்ல மரியாதை உண்டு. அவர்களது சமையல் கட்டு வரை சென்று வரும் ஒரே ஆள் இந்த விஜயகாந்த்தான்.
மணமகளின் தந்தை முஜிபூர் ரகுமான், என் மீது அளவு கடந்த மதிப்பு வைத்துள்ளார். மணமக்களிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். என் மனைவி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர். அதேபோல் மணமக்கள் இருக்க வேண்டும்.
காசு, பணம் முக்கியம் அல்ல. காசு நிறைய சேர்த்தால் தூக்கம் வராது. நாட்டில் லஞ்சம் பெருகிவிட்டது. தெய்வ சக்தி இன்னமும் இருக்கிறது. அதை நம்ப வேண்டும். அதற்காக கண் மூடித்தனமாக இருக்க கூடாது. அதேபோல் அடாவடித்தனமும், பேராசையும் இருக்க கூடாது.
என் மீது 34 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதனை கண்டு நான் பயப்படமாட்டேன். மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவேன்.
மக்கள் பிரச்னை பற்றி பேசக்கூடாது என்று தடுத்தால் நான் பேசிக் கொண்டேதான் இருப்பேன். தேர்தல் இன்னும் வரவில்லை. அதற்குள் யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அதனை பார்க்கலாம். காலம் எவ்வளவோ முன்னேறி விட்டது. லஞ்ச லாவண்யமும் அதேபோல் முன்னேறி வருகிறது.
உழைத்து சம்பாதித்தால் தான் அந்த காசு நிற்கும். அதைத்தான் இந்த விஜயகாந்த்தும் நம்பி இருக்கிறான். நேரம் நல்லா இருக்கும் வரை, எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நான் தெய்வத்தையும், மக்களையும்தான் நம்பி கொண்டிருக்கிறேன். என் தொண்டர்களுக்கு நல்ல மனசு இருக்கிறது. அவர்களையும் என் கட்சியையும் அழிக்க நினைக்கிறார்கள். யாராலும் எங்களை அழிக்க முடியாது'' என்றார்.
தொண்டர்கள் உள்ளவரை யாரும் என்னை எதுவும் செய்யமுடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். தெய்வம் நின்று கொல்லும். என் கட்சியை யாரும் அழிக்கமுடியாது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications