எவருக்கும் வாக்களியுங்கள்... "கவரு"க்கு வாக்களிக்காதீர்.... சகாயம் ஐ.ஏ.எஸ். 'நச்'
சென்னை: தேர்தலில் எவருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்; ஆனால் கவருக்கு (பணத்துக்கு) வாக்களிக்க வேண்டாம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் எப்படி சுட்டிக்காட்டுகிறதோ, அறிவுறுத்துகிறதோ, அதைப்போல நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு நாம் எல்லோரும் நம்முடைய பங்களிப்பை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
நம்முடைய மக்கள், தங்களுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல என்று அறிவிக்க வேண்டும். பணம் பெற்றுக்கொண்டு, பரிசுப் பொருள் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது ஆரோக்கியமான சூழல் அல்ல.
அது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே மக்கள் நேர்மையாக சிந்தித்து, தகுதியான, தங்களுடைய தேசத்திற்கு தன்னலம் கருதாது பங்களிப்பு செய்வார்களோ அவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
நான் ஏற்கனவே கூறியபோல, எவருக்கு வேண்டுமானானும் வாக்களிக்கலாம், கவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு சகாயம் கூறினார்.