தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம்! - உளவுத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து எல்லையோர பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மகராஷ்டிரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் மாவோ தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை பிடிக்க கோப்ரா மத்திய பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் தங்களது இடத்தை அடிக்கடி மாற்றி வருகின்றனர்.
போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக கர்நாடாக, கேரள மற்றும் தமிழகத்தில் மாவோ தீவிரவாதிகள் நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறையினர், போலீசாரின் கட்டுபாடு தளர்த்தப்பட்டுள்ளதாலும், வடமாநிலங்களில் போலீசாரின் கடும் நடவடிக்கையாலும் தென் மாநிலங்களில் மாவோயி்ஸ்டுகள் ஊடுருவல் கடந்த காலத்தை விட அதிகரித்துள்ளதாக மத்திய, மாநில உளவுத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதில் தென் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தலாம் என்ற அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கபினி, நடுகானி, பவானி தலாக்களும், சுரேந்தர் ரெட்டி, மோகன் ரெட்டி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாவோ தீவிரவாதிகள் கர்நாடக, கேரள, தமிழக எல்லையோர வனப்பகுதியில் 5 குழுக்களாகப் பிரிந்து முகாமிட்டுள்ளனர்.
இதில் பாதிக்கு பாதி பெண்களும் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவர்களிடம் நவீன ஆயுதங்கள், கண்ணி வெடிகள், கையெறி குண்டுகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மூன்று மாநிலங்களும் சேரும் எல்லை பகுதியில் இவர்கள் முகாமிட்டுள்ள இவர்கள் வன எல்லையை ஓட்டுயுள்ள 65 இடங்களில் நடமாடி வருவதாகவும் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கேரளாவில் நடத்தியது போன்று தமிழக எல்லையான பாலக்காடு, சத்தியமங்கலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், குமுளி, ஸ்ரீவில்லிபுத்தூர், களியாக்கவிளை, புளியரை உள்பட வனப்பகுதியை ஓட்டியுள்ள வனத்துறை அலுவலகம், காவல் நிலையங்கள் மது மிகபெரிய தாக்குதல் நடத்தவும், இந்த தாக்குதல் அதிகாலையில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது போலீசாரின் ஆயுதங்களை பறிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதால் எல்லையோர போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.