விநாயகர் சதுர்த்தி - வண்ண வண்ண விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவீரம்
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள இந்து மக்களால் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட உள்ளது. முக்கிய தெருக்களில் பந்தல் அமைத்து பிரம்மாண்ட சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம்.
தமிழக கேரளா எல்லைபகுதியான நெல்லைமாவட்டம் செங்கோட்டை,தென்காசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஆண்டுக்கு ஆண்டு, விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி
புதிய குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அந்த பகுதிகளிலும் புதிதாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அண்டைமாநிலமான கேரளாவிலும் கடந்த சில ஆண்டுகளாக சிலைவைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடத்தொடங்கியுள்ளனர்.
சிலை தயாரிப்பு பணி
இதையடுத்து, விநாயகர் சிலைகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. தேவை அதிகரித்ததை அடுத்து, சிலை தயாரிப்பாளர்கள், செங்கோட்டை காலாங்கரை பகுதியில் தங்கியிருந்து சிலைகளை தயாரிக்க துவங்கி உள்ளனர்.
விதம் விதமான சிலைகள்
இந்த பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிலைகளை லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது, இதே பகுதியில், தொழிற்கூடங்களில் தயாரிக்கின்றனர். மூன்று மாதங்களாக இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வண்ண வண்ண விநாயகர்கள்
பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் சிலைகளை தயாரித்துள்ளனர். தற்போது, மரவள்ளி கிழங்கு மாவு,பேப்பார் கூல்,சவ்வரிசி தண்ணீர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட, வெண்ணிற சிலைகள், வெயிலில் காயவைக்கப்பட்டு வர்ணம் பூசப்பாட்டு விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி
மழை தீவிரம் அடையும் முன்பாக, சிலைகளை காயவைத்து, கிடங்கில் பாதுகாத்து வருகின்றனர். ஆடி முடிந்து, ஆவணி பிறந்ததும் சிலைகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதால் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ. 3000 முதல் ரூ.30000 வரை
தமிழக கேரள எல்லைப்பகுதி பகுதிவாசிகள், வித்தியாசமான விநாயகர் சிலைகளுக்கு, இப்போதே ஆர்டர்களை குவித்து வருகின்றனர். 2அடிமுதல் 12அடிவரை சிலைகள் வர்ணம் பூசி இங்கு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. 3ஆயிரம் ரூபாய் முதல் 32ஆயிரம் ரூபாய்வரை விலையில் இங்கு சிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.