அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்போம்: ராமதாஸ்
தூத்துக்குடி: தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்; பா.ம.க. தலைமையிலேயே கூட்டணி; தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் 10 மாதங்களுக்கு முன்னரே களம் இறங்கியது பா.ம.க.
ஆனால் 10 மாதங்களாக பிரதான எந்த அரசியல் கட்சியும் பா.ம.க.வுடன் கூட்டணிக்காக இணையவில்லை. ஆனால் பா.ஜ.க.வோ, தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பா.ம.க. நீடிக்கிறது என கூறிவந்தது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் அண்மையில் அன்புமணியை பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போதும் தானே முதல்வர் வேட்பாளர்; பாமக தலைமையிலேயே கூட்டணி என்பதில் அன்புமணி உறுதியாக இருந்து வந்தார்.
இதன் பின்னர் விஜயகாந்தையும் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். அதேபோல் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் விஜயகாந்த்தை சந்தித்தனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கூட்டணிக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. தொடரும் எனக் கூறியிருக்கிறார்.
பா.ம.க. தலைமையிலான கூட்டணி என்ற முழக்கத்தின் சுருதி சற்று குறைந்திருக்கிறது!












Click it and Unblock the Notifications