தாமரை மலர்ந்தால்தான் பயிர்க்கடன் தள்ளுபடி... "பிளாக்மெயில்" செய்கிறாரா தமிழிசை?
விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தில் தாமரை ஆட்சி அமைந்தால்தான் சாத்தியம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தாராபுரம்: விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்தில் தாமரை ஆட்சி அமைந்தால்தான் சாத்தியம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 41 நாள்கள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இருந்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை. பிரதமர் மோடி அந்தப் பக்கமே திரும்பிக் கூட பார்க்கவில்லை.
விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு
இதனால் தமிழகமே மத்திய அரசின் மீது கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாடு நடந்தது. அதில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
யோகி செய்யும்போது
அப்போது அவர் பேசுகையில், உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்த போது தமிழகத்துக்கு ஏன் முடியாது என்று கேள்வி எழுப்புகின்றனர். அது இங்கும் முடியும்... அதாவது தற்போதைய அதிமுக அம்மா கட்சியின் ஆட்சி செயலற்று கிடக்கிறது.
நாங்க தள்ளுபடி செய்வோம்
அவர்களுக்குள் நடைபெற்று வரும் உள்கட்சி பூசல் காரணமாக தமிழக நலனில் அக்கறை செலுத்த அவர்களுக்கு நேரமில்லை. எனவே உத்தரப்பிரதேசத்தை போல தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலர்ந்தால் பயிர்க்கடன்கள் நிச்சயமாக தள்ளுபடி செய்யப்படும்.
சும்மா போஸ் கொடுக்காதீங்க
டெல்லியில் போராடிய விவசாயிகளுடன் போஸ் கொடுத்த ராகுல்காந்தி, தங்கள் கட்சி ஆளும் கர்நாடகத்தில் பேசி காவிரி நீரை விட சொல்ல வேண்டியதுதானே. அவர் ஏன் அதை செய்யவில்லை. இதற்கு பிறகாவது அவர் கர்நாடகா காங்கிரஸ் அரசை வலியுறுத்த வேண்டும் என்றார் அவர்.