திமுகவுடன் விஜயகாந்த் சேர்ந்திருந்தால் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருப்பார்... சொல்வது வைகோ
திருச்செங்கோடு: சட்டசபை தேர்தலில் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்திருந்தால் தேமுதிக 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்கும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியிருப்பது தேமுதிகவினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
திருச்செங்கோட்டில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
ஈழத்தை அழித்தவர்கள் என்ற பழியில் இருந்து தி.மு.க. தப்ப முடியாது. சட்டசபை தேர்தல் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடந்த தேர்தல் அல்ல.

அதிமுக விமர்சிக்காது
பணநாயகத்திற்கும் மற்றொரு பண நாயகத்திற்கும் நடந்த தேர்தல். இதில் ஜனநாயகம் தோற்று விட்டது. தேர்தல் கூட்டணியில் இல்லாத போது அபாண்டங்களை சுமத்துவது தி.மு.க.வின் வேலை. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த போதும் அ.தி.மு.க. அந்த காரியத்தை செய்யாது.
இவ்வாறு வைகோ பேசினார்.

விஜயகாந்த் காரணம்...
இதே கூட்டத்தில் பேசிய மதிமுக நிர்வாகி மனோகர், மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் தலைவர். அவர் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தது தான் ம.தி.மு.க.வின் தோல்விக்கு காரணமாகிவிட்டது என்றார்.

கூட்டணி தர்மத்துக்கு எதிரானது...
உடனே கடுப்பாகிப் போன வைகோ மைக்கை பிடித்து, இப்படி பேசுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தால் கோடிக்கணக்கில் பணம், சீட்டு கொடுப்பதாக கூறப்பட்டது.

20 சீட் ஜெயிச்சிருப்பார்...
ஆனால் விஜயகாந்த் நம்மை மதித்து குறைந்த வாக்கு வங்கி கொண்ட மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தார். தி.மு.க. கூட்டணிக்கு அவர் சென்றிருந்தால் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றி பெற்றிருக்கும். தி.மு.க.வும் ஆளும் கட்சியாக வந்திருக்க கூடும்.
ஆனாலும் விஜயகாந்த் மக்கள்நலக் கூட்டணிக்கு வந்தார். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். விஜயகாந்தால் நாம் தோற்கவில்லை. இதனால் இதுமாதிரி பேசக்கூடாது என கடிந்து கொண்டார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தால் 20 தொகுதிகளில் தேமுதிக வெல்லும் எனத் தெரிந்திருந்தும் விஜயகாந்தை இழுத்து கட்சியை இப்படி அழித்துவிட்டாரே என ஆதங்கப்படுகின்றனர் தேமுதிக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications