எடப்பாடி வென்றதாக அறிவித்தாலும் இறுதி முடிவு ஆளுநரிடம்தான்- மீண்டும் வாக்கெடுப்புக்கு உத்தரவிடலாம்!
எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அறிவித்தாலும் இறுதி முடிவு ஆளுநரிடம்தான் உள்ளது. அவருக்கு திருப்தி இல்லையெனில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடலாம்.
சென்னை: சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இருந்தபோதும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறை மீது திருப்தி ஏற்படாவிட்டால் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட முடியும்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆளுநரிடம் புகார்
தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடத்தவில்லை என்ற புகாரும் ஆளுநர் முன் வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரிடம் விசாரணை
இதனால் சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆளுநர் கேட்டு பார்வையிடலாம். அதேபோல் சபாநாயகர் தனபாலை நேரில் அழைத்து சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்கவும் முடியும்.

மீண்டும் வாக்கெடுப்பு
இதில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என ஆளுநர் கருதினால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும். அத்துடன் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை கண்காணிக்க 2 பார்வையாளர்களையும் சட்டசபைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாம்.

ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே
அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாகத்தான் இருக்கும். வாக்குச் சீட்டுகளில் எம்.எல்.ஏக்கள் ஆதரவு விவரம் தெரிவிக்கப்பட்டு அது நேரடியாக ஆளுநர் அனுப்பி வைத்த பார்வையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அந்த முடிவுகள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முன்னுதாரணம் இருக்கே..
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முதல்நாள் இரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டு மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடியூரப்பா வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு போனது.
அப்போது ஆளுநராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ், மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பான ஆளுநர் அனுப்பிய பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இருப்பினும் எடியூரப்பா அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications