"நான் அம்மா விசுவாசி" வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: கஞ்சா கருப்பு நச்
தஞ்சாவூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் அந்த கட்சிக்காக பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாகவும் நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்துக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு நடிகர், நடிகைகள் தயாராகி வருகின்றனர். அவர்களை களம் இறக்கி ஓட்டுகளை அல்ல அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் வரும் சட்டமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வாய்ப்பு கொடுத்தால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன் என்று தஞ்சை மாவட்டம் பேராவூரணி, ஆவணம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் என்றைக்கும் அம்மா விசுவாசிதான். கையில் அதிமுக கொடி பச்சை குத்தியுள்ளேன். நான் மற்றவர்கள் போல் மேடை நாகரீகம் தெரியாமல் பேசமாட்டேன். வாங்கம்மா எங்கம்மாவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்றதுக்கு நான் தயார்.
ஏழை குழந்தைகளுக்காக பள்ளி கூடம் கட்டுவதற்காக ஆசைப்பட்டு பாதியில் நிற்குது. வயதானவர்களுக்கான இலவச மருத்துவ சேவை அளிப்பேன். அப்புறம் என்ன அம்மாவுக்காக ஓட்டு கேட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரசாரம் செய்யத் தயார். என்னை யாரும் தேர்தலுக்காக கூப்பிடலே கூப்பிட்டால் பணியாற்றத் தயார். ஒரு செகன்ட் போதுமே எங்க அம்மா ஜெயலலிதா நினைத்தாலே போதுமே வேறெ என்ன வேனும்.
வடிவேலுவை ஒரு கை பார்க்க நான் ரெடி. நாகரீகம் தெரியாம பேசுறவர் தான் வடிவேல். பெரிய தலைவர் விஜயகாந்த் அவரைப் போய் தரக்குறைவாக பேசக் கூடாது. வடிவேலை எதிர்த்து பிரசாரம் செய்வேன். தாக்கி பேசுவேன்.
மக்களை நம்பிக்கை கேப்டன் விஜயகாந்த் ஒரு அணி, வைகோ ஒரு அணி, அந்த பக்கத்திலே கருணாநிதி ஒரு அணி, இங்கிட்டு எங்க அம்மா தலைமையில் இரட்டை இலை அணி உள்ளது. சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பிலே போட்டியிட வாய்ப்பு கொடுத்தா நான் தேர்தல் களம் சந்திப்பேன். அரசியலில் இறங்கும் போது கலையுலகம் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.