மோடி பிரதமரானால் நாட்டுக்கே ஆபத்து: திருமாவளவன் எச்சரிக்கை
சென்னை: நரேந்திர மோடி பிரதமர் ஆனால் அது நாட்டுக்கு ஆபத்தாகிவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த 10வது திமுக மாநில மாநாட்டில் அதன் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கருத்து திணிப்பு
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் இல்லை. இது சமூக நீதிக்கான அறப்போர் ஆகும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிடுகின்றன. ஆனால் அவை வெறும் கருத்து திணிப்புகள் ஆகும். தலித், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களிடம் கேட்காமல் வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகளை எப்படி ஏற்க முடியும்?

திமுக வெற்றி பெறும்
2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது என்றும், திமுக நிச்சயம் தோல்வி அடையும் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் திமுக 25 தொகுதிகளை கைப்பற்றியது. அதே போன்று வரும் தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

நாட்டுக்கு ஆபத்து
மோடி பிரதமர் ஆனால் அது நாட்டுக்கு ஆபத்தாக அமைந்துவிடும். சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுபவர் மோடி. பாஜக முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்தது உண்மையே. ஆனால் வாஜ்பாயின் முகம் வேறு, மோடியின் முகம் வேறு.

பாஜக
பாஜக மட்டும் ஆட்சியை பிடித்தால் முதல் வேலையாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும். ஏனென்றால் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. இந்த தேசத்தை உருவாக்குகிறோம் என்று கூறி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயல்படுவார்கள். அதனால் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது.

திமுக கூட்டணி
தற்போதே திமுக கூட்டணி வலுவாகத் தான் உள்ளது. இந்நிலையில் கூட்டணியை மேலும் வலுப்படுத்த சில கட்சிகளை கருணாநிதி சேர்த்தாலும் அதை ஏற்போம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications