மோடி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தி.மு.க.வை பொறுத்தவரை தேவையென்றால் கூட்டணி வைத்து கொள்வார்கள், வேண்டாம் என்றால் முறித்து கொள்வார்கள். அந்த முடிவைதான் இப்போது எடுத்துள்ளனர். திமுக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அது பாஜகவை பாதிக்காது. 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது கூட தி.மு.க.வின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.
பாஜக எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மோடி அலை தமிழகம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும்.
பா.ஜனதா கூட்டணி பற்றி கவலைப்படவில்லை யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. லோக்சபா தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். இந்தியாவில் பாஜக ஆட்சி, மோடி ஆட்சி வருவது உலகத் தமிழர்களுக்கும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நன்மையாக அமையும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.