தமாகா கூட்டணிக்கு வந்தால் பரிசீலிப்போம்: அன்புமணி ராமதாஸ்
திருச்சி: பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வந்தால் அதை பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் தருமபுரி எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
‘உங்கள் ஊரில் உங்கள் அன்புமணி' என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புதன்கிழமை திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள ராக்போர்ட் வியூ ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கூட்டத்தில் கரூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியில் விரைவில் வெளியிடப்படும். இதில் இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பேரவைத் தேர்தலில் நாங்கள் கூட்டணிக்கா யாருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களுக்கு கூட்டணி தேவையில்லை. எங்களிடம் பலமிருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் 82 சதவிகித இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
2011-ம் ஆண்டில் தமிழகத்தின் நிர்வாகக் கடன் ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ரூ.1.46 லட்சம் கோடி உயர்ந்து தற்போது ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வாகத் திறமையற்றவர். தமிழகத்தில் தொங்கு சட்டச்சபை அமைய வாய்ப்பில்லை.
தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி நிலவுவதால் அதிமுகவுக்கு சாதமாக இருக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அதிமுகவுக்கு சாதமாக இருப்பதாக சில ஊடகங்கள்தான் கூறுகின்றனர். பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் வந்தால் அதுகுறித்து பரீசிலிப்போம் என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications