இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எளிதாக வெல்லும் எடப்பாடி அரசு!
18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு எளிதாக வெல்லும் வாய்ப்பு உள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தற்போதைய நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எளிதாக வெல்லும் என்றே கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மொத்தம் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
மொத்தம் 215 எம்.எல்.ஏக்கள்
இவர்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 135. தற்போது 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 215 என குறைகிறது. அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 117 ஆக இருக்கும்.
Recommended Video
பெரும்பான்மைக்கு 108
மேலும் 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் பெரும்பான்மைக்கு தேவை 108 எம்.எல்.ஏக்கள்தான்.
எளிதில் வெல்லும்
ஆகையால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு எளிதாக வெற்றி பெறும் நிலை இருக்கிறது. தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் சிலர் எதிர்த்து வாக்களித்தாலும் கூட எடப்பாடி அரசுக்கு தற்போது தேவையான 108 எம்.எல்.ஏக்கள் எளிதாக கிடைக்கும்.
எதிர்க்கட்சிகள் வைக்க கூடிய வாதம்
அதேநேரத்தில் 233 எம்.எல்.ஏக்கள் அடிப்படையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கணக்கிடப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தக் கூடும். இதற்கு பதில் தரும் வகையில்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்துவிட்டோமே என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதான் அடுத்தடுத்து அரங்கேற உள்ள காட்சிகள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.