சென்னை ஐ.ஐ.டி. 'பெரியார்- அம்பேத்கர்' அமைப்புக்கு தடை விவகாரத்தில் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பு இல்லை
சென்னை: சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் பெரியார்- அம்பேத்கர் பெயரிலான மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் 2014 ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதியன்று 'அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்பு' தொடங்கப்பட்டது. சமூக, பொருளாதார அரசியல் பிரச்சனைகளை விவாதிக்கும் அமைப்பாக இது செயல்பட்டு வந்ததது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் அதன் செயல்பாடுகளை இந்த அமைப்பு விமர்சித்தது. குறிப்பாக அம்பேத்கர் குறித்த துண்டுபிரசுரம் ஒன்றில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்த துண்டுப் பிரசுரத்தை இணைத்து ஒரு அனாமதேய கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்த அமைப்புக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தடை விதித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மாணவர் அமைப்பின் மீதான தடையை விதிப்பு என்பது தற்காலிகமாக, நிர்வாக ரீதியானது மட்டுமே என்று சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமானது மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை ஒருபோதும் பறிக்காது. அதே நேரத்தில் தங்களது கருத்தை சுதந்திரத்தை உரிய வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் எதிர்பார்க்கிறது.
ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தங்களுடைய செயல்பாடுகளை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, ஆதரவு பெறுவதற்காக நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இத்தகைய வழிகாட்டுதல்களை மீறும் மாணவர் அமைப்புகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படும் வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
இதனிடையே ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பெரியார் - அம்பேத்கர் பெயரிலான அமைப்புக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தடை விதித்ததாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்த விவகாரத்துக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது சர்ச்சைக்குரிய துண்டுபிரசுரத்தை இணைத்து ஒரு மொட்டை கடிதம், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பிரசுரம், மொட்டை கடிதம் ஆகியவற்றை இணைத்து, இது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு மட்டுமே ஐ.ஐ.டி., இயக்குநருக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்நிலை செயலாளர் பிரிஸ்கா மாத்யூதான் மே 15-ந் தேதியன்று கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பெரியார்- அம்பேத்கர் அமைப்புக்கு தடை விதித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது மத்திய அரசு வட்டாரங்கள்.