யோகாவின் அருமை விஜயகாந்த்துக்கே தெரிந்துள்ளது, மற்றவர்களும் உணர வேண்டும்.. இல. கணேசன்
வேலூர்: யோகாவின் பயன் மற்றும் அவசியம் குறித்து பாஜகவினர் மட்டுமல்லாமல், விஜயகாந்த், மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போன்ற பிற கட்சியினரும் கூட உணர்ந்துள்ளனர். இதை அனைவரும் உணர வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வேலூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இல. கணேசன் பேசுகையில், யோகாவிற்கு தனிப்பட்ட மதம், இனம், மொழி, என்ற அடையாளம் இல்லை. யோகா என்றால் அனைவருக்கும் பொது ஆகும். யோகாவின் பயன் மற்றும் அவசியம் பற்றி பிற கட்சிகளை சேர்ந்த விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் போன்றோர் உணர்ந்து உள்ளனர்.

பிரதமர் மோடி ஏழைகள் எதிர்காலத்தில் பயன்பெறும் வகையில் குறைந்த முதலீட்டில் பல காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணம் பற்றி சில கட்சிகள் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகின்றன. நரேந்திர மோடி ஒவ்வொரு பயணத்திலும் இந்தியாவின் செல்வாக்கை உலக நாடுகள் மத்தியில் வெளிக்காட்டி உலக நாடுகளிடையே நட்புறவை வளர்த்து இந்தியாவின் பலத்தை அதிகப்படுத்தி வருகிறார்.
போர் ஆயுதங்கள், விமானங்கள், வெளிநாட்டு கம்பெனிகளின் முதலீடுகளை இந்தியாவிற்கு பெற்று வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதலாளித்துவமும் வேண்டும் என்பதால் தான் அன்னிய கம்பெனிகளின் முதலீட்டை மோடி அரசு வரவேற்றது.
மோடியின் இலங்கை பயணத்திற்கு பிறகு ஈழத்தமிழர்களின் மனதில் புதிய நம்பிக்கை வந்துள்ளது. ஏமனில் நடந்த போரில் அங்கு தவித்து கொண்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வந்த பெருமை மோடியை சாரும். நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாய நிலங்களை முழுமையாக கையகப்படுத்தாது. அவர்களுக்கு அதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications