ஐஏஎஸ் தேர்வில் சாதனை- தடைக்கல்லை வெற்றிப்படிக்கட்டாக மாற்றிய வேலூர் தமிழச்சி இலக்கியா- Exclusive
ஐஏஎஸ் தேர்வில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் அதற்கு தகுதி என்பதெல்லாம் கிடையாது என்பதை நிரூபித்துள்ளார் வேலூரைச் சேர்ந்த இலக்கியா.
வேலூர்: வாய்ப்பு கிடைத்தால் சுமாரான மாணவர்கள் கூட ஐஏஎஸ் ஆகலாம் என்பதை நிரூபித்துள்ளார் வேலூரை அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த இலக்கியா.
2016ம் ஆண்டு நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அருந்ததி நட்சத்திரம் போல சிறப்பாக ஜொலிக்கிறார் ராணிப்பேட்டையை சேர்ந்த இலக்கியா. அப்படி என்ன அவருக்கு மட்டும் தனி அந்தஸ்து என்று கேட்டத் தோன்றும், ஆம் 12 வயதிலேயே தாய், தந்தை விபத்தில் உயிரிழந்து விட்ட சோகத்தை கடந்து இன்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றியை வசப்படுத்தியுள்ளார் இலக்கியா.
முன் மாதிரி பெண்ணாக சாதித்து காட்டியுள்ள இலக்கியாவிடம் ஒன்இந்தியா நடத்திய சிறப்பு நேர்காணல் விவரங்கள்:
வேலூரை அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த இலக்கியா 7வது படித்துக் கொண்டிருந்த போது அவரது தந்தை சேகர், மற்றும் தாய் விக்டோரியா ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டனர். இதனையடுத்து தனது சிறிய தாய் வேதநாயகியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் இலக்கியா. தமது துயரம் தோய்ந்த வாழ்க்கையை விவரிக்கிறார் இலக்கியா...

பெற்றோர் இறந்த சோகம்
அப்பா, அம்மா இறந்த போது சோகம் என்னை கவ்விக்கொண்டது. அந்த நிலையில் என்ன செய்வதென்றே இருந்த போது தான் சித்தி வேதநாயகி என்னையும், தம்பி, தங்கையையும் வளர்க்கத் தொடங்கினார். என்னுடைய அப்பா சேகர் ராணுவத்தில் பணியாற்றியவர், தாய் விக்டோரியா தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அம்மாவின் கனவு
நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே என்னடைய அம்மாவின் ஆசை அதைத்தான் நான் நிறைவேற்றியுள்ளேன். சிறு வயது முதலே சித்தியை பார்த்து வளர்ந்தேன். அவர் ‘தென்றல்' என்ற தொண்டு நிறுவனம் மூலம் மக்களுக்கு சேவையாற்றி வந்தார்.

தோல்வியால் அஞ்சக்கூடாது
அதே போன்று நானும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதாலேயே இந்தியாவிலேயே சிறந்த குடிமை ஆட்சிப்பணியான ஐஏஎஸ்ல் வெற்றி பெற நினைத்தேன். 2015ம் ஆண்டு முதன் முறை தேர்வு எழுதி தோற்றாலும், விடா முயற்சியுடன் 2வது முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று 298வது இடத்தை பிடித்துள்ளேன்.

எல்லாம் சாத்தியமே
அறிவாளிகள் மட்டுமே ஐஏஎஸ் ஆக முடியும் என்பதெல்லாம் கிடையாது, நான் சுமாராண மாணவி தான் என்றாலும் கடினஉழைப்பால் இன்று நினைத்ததை சாதித்துள்ளேன். என்னைப் போலவே பெண்கள் சுயமாக செயல்படும் அதிகாரத்தை பெற முன்வர வேண்டும்.

விழிப்புணர்வு
ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு ஐஏஎஸ் என்ற ஒரு தேர்வு இருப்பதே தெரியவில்லை, அதனால் தான் நான் என்னால் முடிந்த வரை இந்தத் தேர்வு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன், என்கிறார் இலக்கியா. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட தங்கள் இன மக்களுக்கு ஆங்கிலம் தடையாக இருக்கக் கூடாது என்று கல்லூரிப் படிப்பில் ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் படித்துள்ளார் இவர்.

முன்மாதிரி
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகார மையமாக மாற்ற முயற்சிக்கும் இலக்கியாவின் வெற்றி பாராட்டிற்குரியதே. அவர்போலவே மேலும் பல மாணவிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி சாதிக்க முன்வரவேண்டும் என்பதற்கு சான்றாக விளங்குகிறார் இலக்கியா.












Click it and Unblock the Notifications