வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது: நெல்லை எஸ்.பி.
நெல்லை: இடிந்தகரையில் சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது தான் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்கைரயில் உள்ள சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 6 பேர் பலியாகினர், 3 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தை நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக குண்டுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் தயாரித்து வந்துள்ளது. குண்டுகள் தயாரித்தபோது அவை வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாகினர். இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவம் பற்றி வெடிகுண்டு நிபுணர் ஒருவர் கூறுகையில்,
தயாரித்த நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் இருந்த வாளி உள்ளிட்ட பாத்திரங்களில் வைத்திருந்ததாக தெரிகிறது. 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறியதால் தான் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. இடிபாடுகளுக்குள் வெடிக்காத குண்டுகள் இருக்கின்றன. அதனால் அவை வெடிக்காமல் இருக்க இடிபாடிகளில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர். விரைவில் அனைத்து குண்டுகளையும் செயல் இழக்கச் செய்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications