முறைகேடாக குளத்து மண் விற்பனை… பெண்கள் திடீர் சாலை மறியல்
முறைகேடாக குளத்து மண் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே குளத்தை ஆழப்படுத்தும் போது கிடைத்த மண்ணை முறைகேடாக விற்பனை செய்ததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்தது. அதன் எதிரொலியாக வரும் காலத்தில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரி, குளங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமிக்கவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அணைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இதில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண் மற்றும் சவுடு மண்ணை இலவசமாக விவசாய நிலங்கள், வீட்டு பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் செய்பவர்கள் தாசில்தாரின் அனுமதியுடன் பயன் படுத்திக் கொள்ள தமிழக அரசு சமீபத்தில் ஆணையிட்டது.
இந்நிலையில், நாகை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் உள்ள புளியகுளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக குளத்தில் உள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு பதிலாக, 5 அடி ஆழத்திற்கு மேல், ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மணலை அள்ளி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இப்பணியை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது












Click it and Unblock the Notifications