சன் டி.வி. ஊழியர்களை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஹைகோர்ட்டில் சி.பி.ஐ. அப்பீல்!
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் சன் டி.வி. ஊழியர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அவரது வீட்டில் 323 பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை முதன்மை சிறப்பு சிபிஐ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இம்மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.