டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறன் முன்ஜாமீன் தொடருமா? சி.பி.ஐ.கைது செய்யுமா? நாளை 'க்ளைமாக்ஸ்
சென்னை: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் தயாநிதி மாறன் கைதாவாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.
சட்டவிரோத எக்சேஞ்ச் தொடர்பான ஏராளமான விவரங்களை தயாநிதி மாறன் மறைக்கிறார் என்று நமது ஒன் இந்தியாவிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தயாநிதி மாறன் மட்டுமே இது தொடர்பான தகவல்களைத் தர முடியும் என சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் இந்த விவரங்களை சி.பி.ஐ.யிடம் தெரிவிக்க தயாநிதி மாறன் மறுத்து வருகிறார்.
ஏற்கெனவே தயாநிதி மாறனிடம் 3 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் தயாநிதி மாறன் எந்த பதிலையும் சொல்லவில்லை என்றும் கூறுகின்றனர். தயாநிதி மாறன் விசாரணைக்கு ஒத்துழைக்கவே இல்லை என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பே தயாநிதி மாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீனைப் பெற்றுக் கொண்டார். இதனால் தயாநிதி மாறனை சி.பி.ஐ.-ன் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.
ஆனால் விசாரணையின் போது நீங்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் உங்களது முன்ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகுவோம் எனவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியும் உள்ளனர். ஆனாலும் அவர் ஒத்துழைக்காத காரணத்தால் தற்போது உயர்நீதிமன்றத்தில் தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. சி.பி.ஐ.விசாரணையின் போது, தாம் எந்த தவறு செய்யவில்லை என்பதை மட்டுமே தயாநிதி மாறன் கூறியிருக்கிறார். அவரிடம் சில ஆவணங்களைக் கேட்ட போது நான் தருகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் அவருக்கு திங்கள்கிழமை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் உறுதியளித்தபடி தயாநிதி மாறன் எந்த ஆவணத்தையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. இதன் பிறகும் ஒருநாள் காத்திருந்து பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியதாக கூறுகின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நாளைய விசாரணையில் தயாநிதிக்கு முன் ஜாமீன் தொடருமா? அல்லது சி.பி.ஐ.-யால் கைது செய்யப்படுவாரா? என தெரிந்துவிடும்.