தாம்பரத்துக்கு ஆபத்து.. முழக்கமிட்ட ராஜா.. நாலாபக்கமும் பறந்த ஆபிசர்ஸ்..மழைக்காலம் முன்பே செம அதிரடி
தாம்பரம்: தாம்பரம் வெள்ளத்தில் மூழ்கும் என்று பரபரப்பு கிளம்பிய நிலையில், மாநகராட்சியில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்துதான், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு முக்கிய மாநகராட்சி உருவெடுத்தது.

5 மண்டலங்கள்: கிட்டத்தட்ட 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.. மொத்தம் 70 வார்டுகள் இருக்கின்றன.. இவை 5 மண்டலங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
சாலை வசதிகளை போலவே, குடிநீர் வசதியிலும் பெருத்த கவனத்தை தாம்பரம் மாநகராட்சி செலுத்தி வருகிறது.. அதேபோல, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கூடுதலாக மெட்ரோ குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு நடுவில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாகியிருக்கின்றன.. குறிப்பாக, மழைநீர் வடிகால்வாய்களில் படிந்துள்ள கசடுகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த 345.13 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 3.68 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.. இந்த பணிகள் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதி: இதைத்தவிர, கனமழையினால் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளை சீரமைத்திடும் நோக்கில் 53.650 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதேபோல, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் இணைப்பு கால்வாய்களை இணைத்தல், பழுதடைந்துள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைத்தல், இணைப்பு கால்வாய் பகுதிகளில் சிறுபாலங்களை சீரமைத்தல், தேவையான இடங்களில் புதிய சிறுபாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் ரூ.15.28 கோடி மதிப்பீட்டில் துவங்கப் போகிறார்களாம்.
வெள்ள நீர் அபாயம்: மேலும், வெள்ளநீர் சூழ்ந்திடும் பகுதிகளில் வெள்ள நீரினை வெளியேற்ற தேவையான மின் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற இதர தளவாட சாமான்கள் கொள்முதல் செய்தல், தனியார் வெளிகொணர்வு ஆட்கள் தயார் நிலையில் வைத்தல், ஏரிகள் மற்றும் கால்வாய்களில் வெள்ள நீர் வழிந்தோடுவதை தடுக்க மணல் மூட்டைகள் இருப்பு வைத்தல் போன்றவற்றுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில், மழைக்காலத்தில், தாம்பரம் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில், மேற்கண்ட பணிகள் அனைத்துமே விரைவில் முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது தாம்பரம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
தாம்பரம் மூழ்கும்: காரணம், கடந்த வாரம் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய எம்எல்ஏ ராஜா உள்ளிட்டோர், கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
"மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, தாம்பரத்தில் வெள்ளப் பாதிப்பை தடுக்க முடியும். நெடுஞ்சாலைத் துறையினர் மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும். இந்த வருடமும் தாம்பரம் வெள்ளத்துக்கு தப்ப முடியாது.. இந்த வருடம் தாம்பரம் வெள்ளத்தில் மூழ்கும்" என்று அமைச்சர் முன்னிலையிலேயே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலமாக 2024-25 முதற்கட்டமாக 16.94 கோடியில் 35 .580 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மாநில நிதி குழுவின் மூலம் மானியம் நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த வழங்கப்பட்ட நிலையில் அந்த நிதியிலிருந்து ஒரு கோடி மதிப்பீட்டில் 16 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 5 மண்டலங்களிலும் மழைநீர் வடிகால்வாயில் படிந்துள்ள கசடுகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications