சென்னை தனியார் விடுதியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர்.. என்ன திட்டம் என போலீசார் விசாரணை!
சென்னை திருவல்லிகேணி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: திருவல்லிகேணி காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து தனியார் விடுதிகளில் போலீசார் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் மயிலாப்பூரைச் சேர்ந்த விக்ரம் என்ற ரவுடியிடம் கள்ளத்துப்பாக்கி இருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இது போன்ற கள்ளத்துப்பாக்கிகளின் வரத்தும் அதிகரித்து வருகிறது.
போலீசாருக்கு ரகசிய தகவல்
இந்நிலையில் சென்னை திருவல்லிகேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 4 பேர் துப்பாக்கியுடன் தங்கியிருப்பதாக குற்றத்தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவில் அங்குவந்த போலீசார் 4 பேர் தங்கியிருந்த அறையை ஆய்வு செய்தனர்.
தோட்டாக்களுடன் துப்பாக்கி பறிமுதல்
அப்போது அவர்களிடம் துப்பாக்கி ஒன்றும், 7 தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்தவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது திருவல்லிகேணி டி1 காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
4 பேரில் 2 பேர் மதுராங்கத்தையும், மீதமுள்ள 2 பேர் வடசென்னையை சார்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
என்ன திட்டம் என விசாரணை
தொடர்ந்து அவர்கள் எதற்காக இந்த துப்பாக்கி வைத்திருந்தார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரையாவது கொலை செய்யும் திட்டமா அல்லது துப்பாக்கியை விற்பனை செய்ய விடுதியில் தங்கியிருந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.