போக்குவரத்துத் துறை ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் புது முயற்சி - வீடியோ
போக்குவரத்துத் துறை ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்களை அழைத்து அரசு பேருந்தை ஓட்ட வைத்துள்ளதை போக்குவரத்து துறை ஊழியர்கள் கண்டித்துள்ளனர்
ஈரோடு: ஈரோடு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அங்கு அரசுப் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. மேலும் மாவட்ட நிர்வாகம் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுபவர்களை அழைத்து அரசு பேருந்துகளை இயக்கக் கூறியுள்ளது போராட்டத்தை நசுக்கும் வேலை என போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக பணிக்கொடை வழங்கப்படவில்லை. மேலும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என கூறி போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நேற்று மாலை 5 மணி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் காசிபாளையம், பெருந்துறை, பவானி, சத்தியமங்கம் உள்ளிட்ட 14 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 1260 ஊழியர்கள் ஓட்டுநர்களாகவும் கண்டக்டர்களாகவும் பணிபுரிகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக யாருக்கும் பணிக்குச் செல்லவில்லை.
உடனே மாவட்ட நிர்வாகம், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓட்டுநர்களாகப் பணிபுரிபவர்களை அரசு பேருந்தை இயக்க அழைத்துள்ளது. அவர்கள் தான் தற்போது ஈரோட்டில் ஒரு சில அரசுப் பேருந்துகளை ஓட்டிக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் முறைப்படி அனைத்து ஆவணங்களும் இருக்குமா என்பது சந்தேகமே.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பணிக்கொடை கிடைக்காமல் மரித்துப் போன தொழிலாளர்களும் உண்டு. இந்நிலையில் அரசு அவர்களுடன் கடந்த சில மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்களின் துயர் துடைக்க முன் வராதது கண்டிக்கத்தக்கது. உழைத்த கூலியைப் பெறக் கூட போராட்டம் நடத்துவது அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது என ஊழியர்கள் கூறிவருகின்றனர்.