சிவகாசி அருகே வேன் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து... 6 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்...
சிவகாசி : பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் திடீரென கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 பெண்கள் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்த பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அந்த வேன், மீனம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயமடைந்தனர். அதேசமயம், கவிழ்ந்த வேகத்தில் வேனின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால், காயமடைந்த தொழிலாளர்கள் வேனுக்குள் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.