மக்கள் நலக்கூட்டணிக்கும் மதுபான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி - வைகோ
வேலூர்: திமுகவும், அதிமுகவும் மதுபானக் கூட்டணிக் கட்சிகள். நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும், மதுபானக் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நடைபெறவுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதிமுக நகரச் செயலாளர் அ.நசீர்கான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் என்.சுப்பிரமணி (வேலூர் மாநகர்), கண்ணதாசன் (வேலூர் மேற்கு), உதயகுமார் (வேலூர் கிழக்கு) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதுவால் தமிழகத்தை சீரழித்ததில் முதல் இடத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், அதை மேலும் அதிகப்படுத்தி பாழாக்கிய வகையில் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவ்விரு கட்சிகளும் மதுபானக் கூட்டணிக் கட்சிகள்.
கோடிக்கணக்கான பணத்தை திமுகவினரும், அதிமுகவினரும் பதுக்கி வைத்துள்ளனர். எப்படி அதனை விநியோகம் செய்வது என திட்டமிட்டுள்ளனர். இதைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் திராணியில்லாமல் உள்ளனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். எங்கள் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை என்றும் பங்கீடு முடிந்ததும் தொகுதி பட்டியல் உடனடியாக வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications