கடைசி நேரத்தில் வந்த 186 பேர்.. இரவு 9 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு.. தென்காசியில் நடந்தது என்ன?
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட 235வது பூத்தில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் காத்திருந்த 186 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதன் காரணமாகவே தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக 82.41% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிகளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தென் மாவட்டங்களில் குறைவான அளவிலேயே வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனிடையே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்களும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தது. இதனால் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்ட பலரும் மாலையில் தாமதமாகவே சொந்த ஊர் சென்றடைந்தனர்.
திருச்சி நெடுஞ்சாலை வரை போக்குவரத்து நெரிசலும் இருந்ததால், வாக்காளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். அப்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட 235வது பூத்தில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் திடீரென 185 பேர் வந்தனர். இதனால் அவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் டோக்கன் விநியோகம் செய்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு நபராக உள்ளே அனுமதிக்கப்பட்டு இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக 82.41% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. நேற்று தவெக தரப்பில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்களிக்க நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், வாக்காளர்கள் பலருக்கும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு 9 மணி வரை நடந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications