குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது விவகாரம்: தமிழக உள்துறை செயலருக்கு கோர்ட் நோட்டீஸ்!
குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலருக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை: குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலருக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்துறை செயலர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கைப் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த இதுதொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நினைவேந்தல் கைதுக்குப் பிறகு தங்கள் மீது 17 வழக்குகள் பதியப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் திருமுருகன் காந்தி கைது தொடர்பாக உள்துறை செயலர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.












Click it and Unblock the Notifications