விழுப்புரத்தில் அடுத்தடுத்து நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: பதட்டம்... போலீஸ் குவிப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசி சென்றதால் பரபரப்பு நிலவியது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள், 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றுள்ளனர். அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது.
குண்டுகள் வெடித்ததில் அருகில் இருந்த தனியார் பேருந்து, ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகனம் ஒன்று சேதம் அடைந்தது. இதையடுத்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் வெடிகுண்டுகளை வீசிய நபர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.