கூடுதல் வருவாய்: மரக்கரி தயாரிப்பில் மும்முரம் காட்டும் விவசாயிகள்
தூத்துக்குடி: வெளி மாநிலங்களை போல் விளாத்திகுளம் பகுதியிலும் விவசாயிகள் மரக்கரி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைப்பதால் அவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம், சூரன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மனாவரி விவசாயத்திற்கு பிறகு அடுத்த தொழிலாக மரக்கரி தயாரிக்கும் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்களில் வேலிகருவை மரங்கள் அதிக ஏக்கரில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் நன்றாக வளர்ந்த பின் அவற்றை கூலி ஆட்கள் கொண்டு வெட்டுகிறார்கள்.

பின்னர் மரங்களின் அடிப்பகுதியில் உள்ள தூர் மரங்களை தனியாக வெட்டி எடுக்கின்றனர். அதன் பிறகு அந்த தூர் மரங்களை தனியாக கூம்பு போன்று அடுக்குகின்றனர். இதனை சுற்றி மேல்பகுதி வரை நார்கழிவு அல்லது வைக்கோல் கழிவுகளால் மூடி அதன் மேல் ஈரமான களிமண்ணை பூசிய பின்னர் தீ மூட்டுகின்றனர். களிமண் பூசப்பட்ட பகுதிக்குள் உள்ள தூர் மரங்கள் லேசாக புகையுடன் எரியும் தீயில் வெந்து மரக்கரியாக உருமாருகிறது. இந்த மரக்கரி தயாரிப்புக்கு ஒரு வார காலம் ஆகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மரக்கரியை விவசாயிகளிடம் இருந்து வாங்கும் வியாபாரிகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விற்கின்றனர்.
இந்த மரக்கரி டீக்கடைகளில் உள்ள வெந்நீர் கொதிக்க வைக்கும் பாய்லர்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுண்ணாம்பு மற்றும் பல்வேறு வேதியியல் பொருட்கள் தயாரிக்க இந்த மரக்கரியை பயன்படுத்துகின்றனர். இந்த தொழிலில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஆண்டாண்டு காலமாக மரக்கரி தொழில் நடந்து வரும் நிலையில் இந்த மரக்கரி தயாரிப்பதற்கு வட மாநிலங்களில் புதிய முறையை செயல்படுத்துகின்றனர்.
அங்கு கூம்பு வடிவில் செங்கலை அடுக்கி அதனை களிமண் கொண்டு பூசி பின்னர் அதன் உள்புறம் விறகுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி காற்று புகாமல் மூடி விடுகின்றனர். இதில் வைக்கோல் கழிவுகளோ, ஈர மண்ணை வைத்து பூசுவதோ கிடையாது. இவ்வாறு வைத்து பின்னர் தீ மூட்டுகின்றனர். இந்த மரக்கரி டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வட மாநில மரக்கரி டன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் விலை போவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலை அதிகம் கிடைப்பதால் இந்த தொழிலில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications