புத்தாண்டை கொண்டாட ஒகேனக்கல் சென்ற பேங்க் உதவி மேனேஜர் ஆற்றில் மூழ்கி பலி
தர்மபுரி: புத்தாண்டை கொண்டாட ஒகேனக்கல் சென்ற ஏரியூர் இந்திய வங்கியின் உதவி மேலாளர் பிரகாஷ் ஆற்றில் மூழ்கி பலியானார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்(25) என்பவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் புத்தாண்டை கொண்டாட ஒகேனக்கல் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து சிண்டிகேட் வங்கியில் பணிபுரியும் தனது நண்பர்கள் 4 பேரிடம் தனது முடிவை தெரிவித்து அவர்களுடன் ஒகேனக்கல் சென்றார்.
ஒகேனக்கல்லில் உள்ள கோத்திபாறையில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் ஆற்றில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஒகேனக்கல் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடியதில் பிரகாஷின் உடல் தான் கிடைத்தது. இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் வாலிபர் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.