தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம்… இலங்கை அமைச்சர் சாமிநாதன் திமிர் பேட்டி
சென்னை: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் அவர்களை சுடும் அதிகாரம் உள்ளதாக இலங்கை மறு சீரமைப்பு, மறு குடியேற்றும் மற்றும் இந்து விவகாரத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வந்த சாமிநாதன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் அகதிகள் ஓராண்டிற்குள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார். மேலும் பேசிய அவர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார். அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரிய வசதிகள் செய்த பின் இங்குள்ள தமிழர்கள் இலங்கைக்கு அழைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றார்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு தனியாக பிரித்துப் பார்க்கவில்லை என்ற அவர், இலங்கை வடக்கு மாகாணத்தில் 90 சதவீத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக கூறிய அவர், மீதமுள்ள 10 சதவீத கண்ணிவெடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முழுப்பொறுப்பு இந்தியாவிடமே உள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு இலங்கை சட்டத்தில் இடமுள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே எல்லை தாண்டும் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ள நிலையில் சென்னைக்கு வந்துள்ள இலங்கை அமைச்சர், எல்லை தாண்டினால் மீனவர்கள் சுடப்படுவார்கள் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.