இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிக்க இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும்-வைகோ, திருமா
சென்னை: இலங்கையிலுள்ள திரிகோண மலை கடற்படைத்தளத்தில் சித்ரவதைக் கூடங்கள் இருப்பதை ஐநா விசாரணைக்குழு உறுதி செய்துள்ளதையடுத்து இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிக்க இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வைகோ, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற ஐ.நா.வின் விசாரணைக்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் திரிகோண மலை கடற்படைத்தளத்தில் சித்ரவதைக் கூடங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
2010-ம் ஆண்டுக்குப் பிறகும் ஈழத்தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன; சுவர்களில் படிந்துள்ள இரத்தக்கறைகள், கைரேகைகள், ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அந்த அறைகளில் சித்ரவதை செய்யப்பட்திருப்பதை உறுதி செய்கிறது. இதே போல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுவதை நிரூபிக்கும் வகையில் மேலும் ஒரு ஆதார சாட்சியாக மூவர் குழுவின் தகவல்கள் அமைந்துள்ளன.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? இலங்கைக் கொலைக்களத்திற்கு ஆதாரங்கள் தேவையா?
இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் விசாரணையும், நீதி விசாரணையும்தான் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும், சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அந்த இனபடுகொலைகள் 2008-09 இல் நடைபெற்ற இனப்படுகொலைக்குக் கூட்டுக் குற்றவாளியாக இருந்த இந்திய அரசு இன்றளவில் அதே அடிப்படையில் செயல்பட்டு வருவதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, உலகெங்கும் வாழும் தமிழர்கள், நீதி கிடைக்கவும், விடியல் காணவும் தொடர்ந்து அந்தந்த நாடுகளிலும் அறப்போராட்டங்கள் மூலம் அழுத்தம் தர வேண்டியது முக்கியமான கடமை என வலியுறுத்துகிறேன்.என்று அதில் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட மனித உரிமை அமைப்பு ஒன்றின் அறிக்கை இலங்கையில் 50-க்கும் மேற்பட்ட இரகசிய சித்ரவதைக் கூடங்கள் இருப்பதாகத் தெரிவித்தது. இப்போது ஐ.நா. குழுவே அதை உறுதிப்படுத்தியிருப்பது ஈழத் தமிழர்களின் அச்சமும் குற்றச்சாட்டும் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகள் அனைவரையும் உடனடியாக வித்தலை செய்ய இந்திய அரசு இப்போதாவது அழுத்தம் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் இது குறித்து இந்திய பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications