வட்ட வட்ட சப்பாத்தி சுட தெரிந்த மணமகள் தேவை... வைரல் ஆகும் வீடியோ!
சென்னை: மணமகனின் போட்டோக்கள், மணமகளின் போட்டோக்களை வைத்துக்கொண்டு வரன் தேடிய காலம் மலையேறி வருகிறது. இணையதளங்களில் வரன் தேடும் காலம் இது. தனக்கு வரக்கூடிய பெண் எப்படி இருக்க வேண்டும் என்றும், என்னென்ன குணாதிசயங்களை கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதை கிண்டலடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
யுடுயூப்பில் இந்த வீடியோ வைரல் ஹிட் ஆகியுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி வெளியான இந்த வீடியோவை இதுவரை 5லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
படிக்கும் போதும் பருவ வயதிலும் அம்மா அப்பா பேச்சை துளியும் கேட்காத ஆண்கள், திருமணத்திற்கு பெண் தேடல் படலத்தை தொடங்கியதும் அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்து கொள்ளும் வழக்கத்தையும், தினமும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கும் மணமகள் தேவை விளம்பரங்களையும், கேலி செய்து சென்னை ஐஐடி மாணவிகள் அஷ்மிதா கோஷ், அனுக்ருபா இளங்கோ, க்ருபா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் தான் தற்போது சென்னையின் டாக் ஆப் தி டவுன்.காரணம் இவர்களின் வீடியோ அந்தளவிற்கு இக்கால இளம்பெண்களைக் கவர்ந்துள்ளது.
அமிதா கோஷின் இந்த பாடல்வரிகளில் அனுக்ரிபா இளங்கோவின் குரல்வளத்தில் க்ருபா வர்கீசின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தைக் காண ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
என்னதான் படித்து வேலைக்குப் போனாலும் நாகரீகம் வளர்ந்து விட்ட இந்த கால கட்டத்திலும் திருமணத்திற்கு பிறகான பெண்ணின் வாழ்க்கை இன்னமும் மாறாமல்தான் உள்ளது என்பதை மையக் கருவாக கொண்டு இந்த பாப் இசை பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண் என்பவள் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகம் விதிக்கும் கட்டளைகளுக்கு எதிராக இனிய இசையால் சவுக்கடி கொடுத்துள்ளனர் இந்த பெண்கள்.
மாப்பிள்ளைக்கு கைநிறைய சம்பளம், ஆறடி உயரம்,சொந்த வீடு உள்ளது,அம்மா செல்லம் என கூறி தங்களுக்கு ஏற்ற பெண்ணாக ஒல்லியான தேகம்,நல்ல நிறம்,வட்டமாக சப்பாத்தி சுட வேண்டும் எனக் கூறி வரன் தேடும் ஒரு மணமகனின் தாய் பாடுவதாக இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களில் தான் வரதட்சனை கொடுமைகள் அதிகம் உள்ளது என்ற கருத்தோட்டம் இருக்கும். அதேபோல் மேல் தட்டு குடும்பங்களிலும் வரதட்சனை எந்த வடிவத்தில் உள்ளது என்பதும் இந்த பாடல் மூலம் வெளிக்கொண்டு வரப்படுகிறது
வரன் பார்க்கும் படலத்தில் இனியாவது மாற்றம் வர வேண்டும் என்ற பார்வையை அழுத்தமாக பாடி பதிவுசெய்கின்றனர் இந்த ஐஐடி மாணவிகள்.












Click it and Unblock the Notifications