தோழிக்கு ரூ. 8 லட்சம் கொடுத்து கள்ளக்காதலியின் காதலனைப் போட்டுத் தள்ளிய நிறுவன அதிபர்!
சென்னை: தான் காதலித்து வந்த பெண்ணை, இன்னொருவர் அபகரித்து விட்டதால் ஆத்திரமடைந்த தனியார் நிறுவன அதிபர், தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் ரூ. 8 லட்சம் கொடுத்து காதலியை அபகரித்தவரை ஆள் வைத்துக் கொன்றுள்ளார். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக கூலிப்படையை ஏற்பாடு செய்த பெண் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைக்கான கூலிப்படையை ஏற்பாடு செய்தது குறித்து அந்தப் பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விக்கி என்கிற புஷ்பராஜ்
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 27 வயதான விக்கி என்கிற புஷ்பராஜ். இவர் சதாசிவம் என்பவரின் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு இவரை வேலையிலிருந்து நீக்கி விட்டார் சதாசிவம். இதனால் வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் விக்கி.
ஒரு மாதத்திற்கு முன்பு மாயம்
புதிய வேலையில் சேர்ந்த, நிலையில் ஜூன் 28ம் தேதி முதல் விக்கியைக் காணவில்லை. போலீஸிலும் புகார் தரப்பட்டது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை.
விக்கியின் காதலி
இந்த நிலையில் விக்கி காதலித்து வந்தவரான சுஜாதா என்ற பெண் (இவர் சதாசிவம் நிறுவனத்தில் பணியாற்றுபவர்) விக்கியின் வீட்டுக்குப் போனார். அவரது பெற்றோரிடம், சதாசிவம் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸில் தெரிவித்தனர் பெற்றோர்.
சிக்கினார் சதாசிவம்
இதையடுத்து சதாசிவத்தைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் விக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சுஜாதாவுடன் சதாசிவம் கள்ளக்காதல்
54 வயதான சதாசிவத்தின் கள்ளக்காதலிதான் சுஜாதா. கம்ப்யூட்டர் ஆபரேட்டராக இருக்கிறார் சுஜாதா. திருமணமானவர்.
விக்கியுடனும் கள்ளக்காதல்
இந்த நிலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளார் விக்கி. அவருடனும் சுஜாதா தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார். இது சதாசிவத்திற்குத் தெரிய வரவே அவர் கோபமடைந்தார். விக்கியை வேலையை விட்டு நீக்கினார்.
வெளியில் தொடர்ந்த கள்ளக்காதல்
ஆனால் சுஜாதா, விக்கியை விடவில்லை. வெளியில் பழகத் தொடங்கினர். இதனால் கோபம் கொண்டார் சதாசிவம்.
களம் இறங்கிய எஸ்தர் ராணி
இதையடுத்து தனது நிறுவனத்தில் வேலை பார்த்து பின்னர் நின்று விட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த எஸ்தர் ராணியிடம் போனார். அவரிடம் விக்கி குறித்துப் புலம்பிய அவர் தீர்த்துக் கட்ட ஆட்களை ஏற்பாடு செய்யக் கூறினார். அவரும் சரி என்றார்.
விக்கியைக் கடத்திய கூலிப்படை
இதன் பின்னர் எஸ்தர் ராணியின் ஏற்பாட்டின் பேரில், அதே பகுதியை சேர்ந்த விமல், பாண்டு, பாபு, சத்தியநாராயணா, ரமேஷ் ஆகியோர் சேர்ந்து விக்கியை காரில் கடத்தினர். போகும் வழியில் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.
உடல் எரிப்பு
பின்னர் உடலை ஆந்திரா மாநிலம் கடப்பா அருகே எரித்து விட்டனர். அதன் பிறகு சென்னைக்கு வந்து எதுவும் தெரியாதது போல இருந்துள்ளனர். சதாசிவம் சிக்கியதைத் தொடர்ந்து, எஸ்தர் ராணி உள்ளிட்ட 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
ரூ. 8 லட்சம்
கைதான எஸ்தர் ராணி தற்போது மேலும் ஒரு பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த கொலையை பாண்டு, விமல் தான் செய்தனர். மற்றவர்கள் உதவி செய்தனர். உடலை கொண்டு போய் எரித்ததும் அவர்கள் இருவரும்தான். இதற்காக பாண்டு, விமலுக்கு தலா இரண்டரை லட்சம் கொடுத்ததாகவும் மீதி 3 லட்சத்தை மற்றவர்கள் பங்கு போட்டுக் கொண்டதாகவும் எஸ்தர்ராணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications