ராஜன் செல்லப்பா ஆரம்பம்தான்.. அடுத்தடுத்து நிறைய கிளம்பப் போகுதாம்!
Recommended Video
சென்னை: ராஜன் செல்லப்பா கலகக் குரல் பின்னணி என்ன என்பது பெரும் பரபரப்பான விவாதமாகியுள்ளது. இன்னும் சில தலைவர்களின் குமுறல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர்தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என மதுரை முன்னாள் மேயரும் அதிமுக எம்.எல்.எ வுமான ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைதேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. சட்டப்பேரவை தேர்தலில் தான் கூறிய நபருக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தியில் இருந்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். இவர் இப்போது திடீரென்று பொங்கியதற்கு பின்னால் உள்ள காரணங்களை சற்று திரும்பி பார்க்கலாம்.
இடைதேர்தல் நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் வருகிறது. இதன் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா. இவர் புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வேட்பளாராக்க பரிந்துரை செய்திருந்தார். அதே வேளையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சினிமா பைனான்சியர் அன்புசெழியனையும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல், மறைந்த எம்எல்ஏ ஏ.கே.போஸ் குடும்பத்தில் ஒருவரையும் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தனது மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி என்பதால், தான் பரிந்துரை செய்த ரமேஷைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ராஜன் செல்லப்பா தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார், ஆனால் மூவரின் பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. அப்போது ராஜன் செல்லப்பாவிடம் ஏற்கனவே உங்கள் மகனுக்கு எம்.பி சீட் கொடுக்கப்பட்டுவிட்டது. மீண்டும் உங்கள் ஆதரவாளருக்கு சீட் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக தெரிகிறது.
அதற்கு ராஜன் செல்லப்பா தரப்பினரோ, "எனது புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து 3 சட்டமன்றத் தொகுதிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுத்துவிட்டுத்தான் எனது மகனுக்கு 'சீட்' கொடுத்தீர்கள். அதுவும் கட்சித் தலைமை ஒரு பைசா கொடுக்கவில்லை. என்னுடைய சொந்தச் செலவில் தேர்தல் பணியைச் செய்தேன், என்று அப்போதே குரலை உயர்த்தியுள்ளார். உளவுத்துறை அறிக்கைப்படி பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி சுகாதாரக்குழுத் தலைவர் முனியாண்டியை தேர்வு செய்துள்ளனர்.
இப்படியாக ராஜன் செல்லப்பா கட்சி மீது அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த அதிருப்தி தனது மகன் ராஜ் சத்யன் மதுரை மக்களவைத் தொகுதியில் தோற்றதும் கோபமாக மாறியுள்ளது. அதற்கு ஒரு காரணம் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்தது என்று இப்போது அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் கூறிவருகின்றனர்.
பாஜகவோடு கூட்டணி அமைத்ததற்கு ஓபிஎஸ் முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அதிமுக தேனி தொகுதி தவிர அனைத்து தொகுதிகளையும் இழந்து படு தோல்வி அடைந்துள்ள நிலையில் தனது மகன் ரவீந்திர நாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ரவீந்திர நாத் மத்திய அமைச்சர் ஆகிவிட்டால் டெல்லியில் அவரது செல்வாக்கு அதிகமாகும் என்று கருதிய ஈபிஎஸ் தரப்பு வேறு விதமாக காய் நகர்த்த துவங்கியது
இதனையடுத்து அதிமுக சீனியர் தலைவர்களுள் ஒருவரான வைத்தியலிங்கமும் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுக்க பாஜக அதற்கு மறுத்து விட்டது. இதற்கிடையே துணை முதலமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை கட்சியை கைப்பற்ற வேண்டும், மீண்டும் பொது செயலாளர் பதவியை கொண்டு வரவேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு காய் நகர்த்தி வருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவே பாஜக கூட்டணியே அதிமுக தோல்விக்கு காரணம் என்று சில அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் சுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் பாஜகவை கை கழுவி விட்டு அதிமுகவை தனது பிடிக்குள் கொண்டு வர ஈபிஎஸ் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதனாலேயே ஆட்சியின் தலைமைப் பீடத்தில் இருக்கும் ஈபிஎஸ் -சே கட்சிக்கும் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும், அதுவும் ஒற்றைத் தலைமையாக இருத்தலே நலம் என்ற பொருளிலேயே ராஜன் செல்லப்பா இன்று பேட்டியளித்துள்ளார் என்று அரசியல் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். அதோடு பாஜகவோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தியடைந்த சில தலைவர்கள் வெகு விரைவில் தங்களது அதிருப்தியை காட்டி போர்க்கொடி தூக்குவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications