வெற்றிகரமாக நடந்தது பழனி-உடுமலைப்பேட்டை அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்!
பழனி: நீண்ட கால கோரிக்கையான பழனி-பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிவடையும் தருவாய்க்கு வந்துள்ளன. பழனி-உடுமலைப்பேட்டை வரையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பழனி-பொள்ளாச்சி நடுவேயான அகல ரயில்பாதை பணி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 63 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையில் தற்போது பணிகள் முடிந்துள்ளன. இந்த வழித்தடத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இன்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

தண்டவாளத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டதுடன் பயணிகள் ரயில் பெட்டிகளுடன் வெள்ளோட்டம் விடப்பட்டது. எனினும் அதிவேக ரெயில் இயக்கி சோதனை நடத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது.
அதன்படி நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 10 டிராலிகளுடன் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டனர். பழனி முதல் உடுமலைபேட்டை வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது.
இன்று உடுமலைப்பேட்டையில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இன்று நடந்த சோதனையில் தண்டவாளங்கள், சிக்னல்கள், பாலங்கள் சரிபார்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications