ரவுடிக்கு கேக் ஊட்டிய சேலம் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்
சேலத்தில் ரவுடி பிறந்த நாளன்று அவருக்கு கேக் ஊட்டியதாக காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம்: சேலத்தில் காவல் ஆய்வாளர் கருணாகரன், ரவுடி சுசீந்தரனின் பிறந்தநாளன்று தனது வீட்டுக்கு வரவழைத்து கேக் வெட்டி அவருக்கு ஊட்டிய படம் வைரலான நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
மேலும் காவல்துறையினரை கையில் வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்வதாகவும் சுசீந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

சுசீந்தரன் பிறந்தநாள்
அப்போது ரவுடிகளை தனது வீட்டிற்கு அழைத்த காவல் ஆய்வாளர் கருணாகரன் அவர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியதோடு, சுசீந்தரனுக்கு கேக் வெட்டி ஊட்டி உள்ளார். இதனையடுத்து ரவுடி சுசீந்திரனும், ஆய்வாளர் கருணாகரனுக்கு கேக் ஊட்டி விட்டுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதிகாரி நடவடிக்கை
இந்த தகவல் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு தெரியவந்ததையடுத்து, ஆய்வாளர் கருணாகரனை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டுள்ளார். ரவுடியுடன் காவல் துறை ஆய்வாளர் ஒருவர் நெருக்கம் காட்டியுளஅள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 ரவுடிகள் கைது
பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் கடந்த 2-ஆம் தேதி ரவுடி பினு தனது பிறந்தநாள் கேக்கை வீச்சரிவாளால் வெட்டி நூற்றுக்கணக்கான ரவுடியுடன் கொண்டாடிய போது 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை சென்னை போலீஸார் சுற்றி வளைத்தது குறிப்பிடத்தக்கது.

காமெடி பீஸான பினு
அப்போது ரவுடி பினு தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பினுவை சுட்டு பிடிக்க போலீஸார் முடிவு செய்திருந்ததை அறிந்த பினு ஒருவாரம் கழித்து சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் அவராகவே சரணடைந்தார். தான் ஒரு பெரிய ரவுடி இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்த வீடியோ காட்சிகள் வடிவேல் ரவுடி வேட வீடியோவுடன் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகின.












Click it and Unblock the Notifications