இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு… பதிலுக்கு துப்பாக்கி சூடு… மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரை காமராஜர் புரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையினரை பிடிக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீழ்மதுரை அருகே உள்ளது காமராஜர் புரம். இங்கு திமுக பிரமுகர் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் 7 பேர் கொண்ட கூலிப்படையினர் நேற்று இரவு குருசாமியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது குருசாமி வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சாலையில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கியது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கீரைத்துறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சூரக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அந்த கும்பலை விரட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அந்த கும்பல் இன்ஸ்பெக்டர் சூரக்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளது. இதனால் சூரக்குமார் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனையடுத்து, 7 பேர் கொண்ட கும்பலில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.