கலாம் பெயரில் சர்வதேச விருதை நிறுவி வழங்க வேண்டும்... மோடிக்கு வேல்முருகன் கோரிக்கை
சென்னை: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் சர்வதேச அளவில் விருது வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமேஸ்வரத்தில் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம் அமைத்திட வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்று நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் நிகழ்ச்சிக்கு மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் வருகை தர உள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கைத்தறி நெசவாளர்களின் நிலை இன்னமும் வறுமை எல்லையைத் தாண்டவில்லை. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை இன்றைய நிகழ்ச்சியில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவிப்பதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழகத்தின் நீண்டகால கோரிக்கைகளான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு ஒழுங்கு முறை வாரியம் அமைக்க வேண்டும்; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக தேக்கி வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை மாண்புமிகு பிரதமர் அவர்கள் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை குரலாக ஒலிப்பது ராஜிவ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே.. முந்தைய காங்கிரஸ் அரசைப் போல இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்காமல் தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்திய மண்ணில் இதுவரை நிகழ்ந்திராத மிக மோசமான இனப்படுகொலையாக 20 அப்பாவி கூலி தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர மாநில காவல்துறை அட்டூழியமாக படுகொலை செய்துள்ளது. இந்த படுகொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட உணர்வெழுச்சிப் பேரணியை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சென்னையில் நடத்தி மேதகு ஆளுநர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம்.. அந்த 20 தமிழர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி, வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளது.
இருப்பினும் 20 தமிழரை படுகொலை செய்த குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கை.
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்று தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி உறுதியளித்தது. ஆனால் தற்போதும் கூட இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் வாடி வருகின்றனர். தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குவது என்ற கொடூரம் தொடர் கதையாகி வருகிறது. பாகிஸ்தான் சிறையில் உள்ள குஜராத்தின் மீனவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ததைப் போல இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
அத்துடன் மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் துயில் கொள்ளும் ராமேஸ்வரம் மண்ணில் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம் ஒன்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பை தமிழகம் வருகை தரும் இந்த நேரத்தில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் வெளியிட்டால் அது தமிழகத்துக்கு ஆறுதலாக இருக்கும்;
தாய்மொழியாம் தமிழ் வழியில் கல்வி கற்று அகிலமே வியக்கும் வகையிலான அணுவியல் அறிஞராக திகழ்ந்து மக்களின் குடியரசுத் தலைவராக மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள மாமேதை அப்துல் கலாம் அவர்களது பெயரில் சர்வதேச விருது ஒன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் வங்கக் கடல் மைந்தரான மேதகு அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதராம் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு பிரம்மாண்டமான சிலையை தாங்கள் அமைத்தது போல அப்துல் கலாம் அவர்களது திருவுருவச் சிலையை அவரது தாய்மண்ணாம் ராமேஸ்வரத்தின் வங்கக் கடல் பகுதியில் நிறுவ வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications