மதுவின் தீமைகள் பற்றிய பிரச்சாரத்தில் மக்கள் நலப்பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும்: ராமதாஸ்
சென்னை: மக்கள் நலப்பணியாளர்களை மதுவின் தீமைகள் பற்றிய பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நீதி கிடைத்தது...
கடந்த 3 ஆண்டுகளாக உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என்ற பல்வேறு நீதிமன்றங்களின் கதவைத் தட்டிய மக்கள் நலப்பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி தான் நீதி கிடைத்தது.
அரசு வேலை...
மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும், அவர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாத இறுதிக்குள் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் அல்லது ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
கோர்ட்டின் யோசனைகள்...
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அவர்களுக்கு எப்படி எல்லாம் வேலை வழங்கலாம் என்பதற்கான யோசனைகளையும் தெரிவித்திருந்தனர்.
மேல்முறையீடு...
ஆனால், அவை அனைத்தையும் நிராகரித்து விட்டு சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் மக்கள் நலப்பணியாளர்கள் மீது மனிதாபிமானம் காட்டுவதற்குக் கூட தயாராக இல்லை.
கருணை அடிப்படையிலாவது...
மக்கள் நலப்பணியாளர்கள் குறைந்த ஊதியம் பெறுபவர்கள்; அவர்களின் ஊதியத்தைதான் அவர்களின் குடும்பங்கள் நம்பியிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் வாடும் மக்கள் நலப்பணியாளர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையிலாவது மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்குவது தான் சட்டப்படியாகவும், தார்மீக ரீதியாகவும் சரியானதாக இருக்கும்.
பிரச்சாரம்...
எங்கெல்லாம் காலிப் பணியிடங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் நலப் பணியாளர்களில் தகுதியுடையவர்களை நியமியுங்கள்; இல்லாவிட்டால் மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யும் பணியிலாவது அவர்களை ஈடுபடுத்துங்கள் என்று உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது.
தீர்ப்பு...
ஆனால் அதை மதித்து செயல்படுத்த அரசு தயாராக இல்லை. ஏற்கனவே இவ்வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு மேல்முறையீட்டுக்காக கொண்டு செல்லப்பட்டு, உச்சநீதிமன்ற அறிவுரைப்படிதான் உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது
மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை...
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தை கவுரவ பிரச்சினையாகவோ அல்லது மக்கள் நலப் பணியாளர்களை விரோதிகளாகவோ பார்க்காமல் கருணையுடன் இப்பிரச்சினையை தமிழக அரசு அணுக வேண்டும். உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப் பெற்று, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.