சென்னை ஐபிஎல் போட்டியை இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்களை தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
சென்னை: சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று மும்பையில் வாங்கடே மைதானத்தில் தொடங்கியது. சென்னையில் வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதவிருக்கின்றன.
இந்நிலையில் காவிரிக்காக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த போட்டிகளை சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்ற தமிழக, கேரள கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த செய்தியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை ஐபிஎல்லை மாற்ற எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மறுப்பு தெரிவித்துள்ளது.