ரயில்வேயின் "குட்டீஸ்" ஸ்பெஷல் சாப்பாடு.. ஒன்றல்ல, இரண்டல்ல பாஸ்.. 5 வகைகளில் அறிமுகம்!
சென்னை: குழந்தைகளுக்காக ஐந்து வகை உணவுகளை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் இது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணம் என்றாலே பலருக்கு அயர்ச்சியாக வரும். காரணம், சரியான சாப்பாடு கிடைப்பது என்பது தொடர் சிக்கலாக இருந்து வருவதால். குறிப்பாக குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.
சுகாதாரமான, வயிற்றைக் கெடுக்காத உணவுகளை குழந்தைகளுக்குத் தேடிப் பிடித்து வாங்குவது பெரிய பஞ்சாயத்தாக உள்ளது. அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
குழந்தைகளுக்காக
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு வளாகத்தில் தற்போது குழந்தைகளுக்காகவே பிரத்யேகமான 5 வகை உணவுகளை ஐஆர்டிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஊத்தப்பம்- ஜூஸ் - இட்லி
மினி ஊத்தப்பம் மற்றும் 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.55-க்கும், மினி இட்லி (5) மற்றும் 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.60-க்கும், 1 பூரி, 1 இட்லி, ஐஸ் கிரீம் ஆகியவை சேர்ந்து ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 உணவு வகைகளும் காலையில் கிடைக்கும்.
நூடூல்ஸ் - ஃபிரைட் ரைஸ்
இதேபோல், 100 கிராம் நூடுல்ஸ், டிரை செய்யப்பட்ட காலிபிளவர் 100 கிராம், 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.100-க்கும், 100 கிராம் பிரைடு ரைஸ், டிரை செய்யப்பட்ட காலிபிளவர் 100 கிராம், 100 மி.லி. ஜூஸ் சேர்ந்து ரூ.90-க்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
புக்கிங் செய்து வாங்கலாம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த உணவு வகைகள் டிக்கெட் புக்கிங் செய்யும்போதே இதையும் சேர்த்து புக் செய்ய ஏதுவான வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்து வருகிறது. விரைவில் அதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடுவோம்.
விரைவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
முதல்கட்டமாக தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள புட் பிளாசாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை சென்டிரலில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. படிப்படியாக முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாம்.