காய்ந்தால் என்ன.. பெய்தால் என்ன.. விவசாயி செத்தால் என்ன.. இருந்தால் என்ன.. நாற்காலியே பிரதானம்
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இன்றும் மேட்டூர் அணையை திறக்காமல் கிடப்பது விவசாயிகளிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கொஞ்சமாவது சிந்திக்கிறதா தமிழக அரசு?
சென்னை: தமிழகத்தில் வறட்சியின் காரணமாக 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்தும் மாரடைப்பாலும் மாண்டனர். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்கு நீர் விட வேண்டும். ஆனால் வழக்கம் போல இந்த ஆண்டும் திறக்கப்படவில்லை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.68 அடியாக சரிந்துள்ளதால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறப்பில்லை
மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு ஜூன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும். இதற்கு ஜனவரி 28ம் தேதி வரை, மொத்தம் 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். கடந்தாண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

16 ஆண்டுகள் மட்டுமே..
கடந்த 2011ல், அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், ஒரு வாரத்திற்கு முன்பாக ஜூன் 6ம் தேதியே, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் 83 ஆண்டு கால வரலாற்றில், 16 ஆண்டுகள் மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால் விரக்தியில் உள்ளனர் விவசாயிகள்.

ஏமாற்றிய பருவமழை
கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவமழையும் பொழியவில்லை. இதனால் கடுமையான வறட்சிக்கு தமிழகம் ஆளானது. சாகுபடி செய்த பயிர்கள் எல்லாம் கருகி நாசமாகின.

தற்கொலை
இதனால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பயிர் கருகிய அதிர்ச்சியிலும் மாரடைப்பாலும் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தார். தொடர்ந்தும் விவசாயிகள் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

தொடரும் போராட்டம்
காவிரி நீர் கேட்டும், மாண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லிக்கே சென்று 40 நாட்களுக்கும் மேலாக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகளுக்கான அரசா?
ஆனால் விவசாயம் குறித்து தமிழக அரசு முறையான நிலையான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. "அம்மா அரசு விவசாயிகளுக்கான அரசு" என்று மட்டும் முதல்வர் பழனிசாமி மேடை தோறும் பேசி வருகிறார்.

தகிடுதத்தோம் முதல்வர்
ஆனால், விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளுக்கு முதல்வர் முகம் கொடுப்பதில்லை. இதனை எல்லாம் கவனிக்க முதல்வர் பழனிசாமிக்கு எங்கே நேரம் இருக்கிறது. திடீர் என்று கிடைத்த முதல்வர் பதவியை காத்துக் கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. இரு அணிகள் இணைப்பு, தினகரனை சமாளிப்பது என முதல்வர் தகிடுதத்தோம் போட்டுக் கொண்டிருக்கிறார் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகளை காக்க..
காவிரியில் இருந்து நீரைப் பெற தமிழக அரசு முறையான பேச்சுவார்த்தையை கர்நாடக அரசுடன் மேற்கொள்ளவில்லை. அப்படி நடத்தி இருந்தால் விவசாயிகளுக்கு இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்திருக்காது. மேலும், உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் தொடர்பான வாதத்தையும் தமிழக அரசு சார்பில் சரியாக வைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து இந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலைகள் நிகழாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications