ஆட்டோ!.. ஐயோ!!!
நடுத்தர வர்க்கத்துக்கு மக்களின் நம்பிக்கை வாகனம் ஆட்டோதான். பஸ் ஸ்டாப் அருகில் வீடு இருப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் பேருந்து பயணம் எளிதுதான்.
ஆனால் பேருந்து நிறுத்தத்திற்கு செல்லவே ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எளிதாக நாடுவது ஆட்டோதான்.
சென்னையில் ஆட்டோக்களுக்கு செலவழிக்கவே தனியாக சம்பாதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் சிரமத்தில் கருத்தில் கொண்டுதான் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனாலும் இப்போதும் சில கிலோ மீட்டர் பயணத்திற்கு கூட சட்டென்று 150 ரூபா கொடுங்க என்று இன்னமும் கூசாமல் கேட்கும் ஆட்டோ டிரைவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
நடுத்தவர்க்கத்தின் வாகனம்
என்னதான் ஷேர் ஆட்டோக்களும், கால் டாக்ஸிகளும் இருந்தாலும் அவசரத்திற்கு ஆட்டோவைத்தான் நாட வேண்டியிருக்கிறது நடுத்தரவர்க்கம்.
ரயில் பிடிக்கவோ, மருத்துவமனைக்கோ அவசரமாக செல்ல வேண்டியிருந்தால் வேறு வழியின்றி டிரைவர்கள் கேட்பதை கொடுத்துதான் ஆகவேண்டியிருக்கிறது.
மீட்டர் கட்டணம்
இதுபோன்ற அடாவடி ஆட்டோ டிரைவர்களுக்காகவே போக்குவரத்து துறை அதிகாரிகளும் போலீசும் சேர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீட்டருக்கு மேல் அதிகம் பணம் கேட்டாலோ, வாடிக்கையாளர்களிடம் அடாவடியாக வசூலித்தாலே ரூ.2500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர் போக்குவரத்து துறை அதிகாரிகள். அதோடு மீட்டர் பொருத்தாமல் முறைகேட்டில் ஈடுபடும் ஆட்டோக்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.
ஆட்டோக்கள் பறிமுதல்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த கட்டணம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 528 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 130 ஆட்டோக்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டிரைவர்கள் மறியல்
இதனால் வெகுண்டெழுந்த ஆட்டோ டிரைவர்கள், ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என்று அமர்களம் செய்து விட்டனர். ரூ.2500 அபராதம் என்பது அநியாயம், ரூ.100 பைன் போட்டால் போதும் என்பது ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை.
அடாவடி டிரைவர்கள்
ஏனென்றால் அபராதக்கட்டணம் 100 ரூபாய் என்றால் எளிதாக கொடுத்துவிடலாம் அல்லவா? அதனால்தான் அபராதக் கட்டணத்தை குறைக்க கூறுகின்றனர். பால் விலை ஏறிப்போச்சு அதை குறைச்சாங்களா? அரிசி, பருப்பு விலை ஏறிக்கிட்டே போகுது நாங்க எங்க போறது என்று கேட்கின்றனர் ஆட்டோ டிரைவர்கள்.
மனசாட்சி இல்லையே?
வீட்டருகே இருக்கும் ஆட்டோ என்று அழைத்தால் கூட அவசரத்திற்கு வருவதில்லை. ரூ.200 கொடுக்க தயாரா? வருகிறோம். இல்லையா ரெஸ்ட்தான் என்கின்றனர். ஆட்டோ ஸ்டேண்ட் டிரைவர்கள் என்றாலே அடாவடிக்காரர்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஒரு நடந்துள்ளது. ஆட்டோ டிரைவர்களின் அடாவடியைக் கண்டித்து டிவியில் பேட்டி கொடுத்தவரை 20க்கும் மேற்பட்ட அடித்து நொறுக்கியுள்ளனர்.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு
இதுபோன்ற பொறுப்பில்லாத ஆட்டோ டிரைவர்கள் ஒருபக்கம் இருந்தாலும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மீட்டருக்கு மேல் வாங்கமாட்டோம் என்று சத்தியபிரமாணம் செய்து கொண்ட பொறுப்பான ஆட்டோ டிரைவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
கடமை உணர்வு
காவல்துறையினருக்கு அடுத்த படியாக காக்சிச்சட்டை அணிவது எங்களுக்கு ஒரு கடமை உணர்வை கொடுக்கிறது என்று பெருமையாக கூறும் இந்த ஆட்டோ டிரைவர்கள் வாடிக்கையாளர்களை தங்களின் கடவுளாக பார்ப்பதாக கூறுகின்றனர்.
இலவச சவாரி
அண்ணாதுரை என்ற ஆட்டோ டிரைவர் ஐ.டிதுறையில் உள்ளவர்களுக்கு அதிகம் பரிச்சயமானவர். திருவான்மியூரில் இருந்து சோழிங்கநல்லூர் வரை ஷேர் ஆட்டோ ஓட்டும் இவர் தனித்துவம் மிக்கவர். இவர் தன்னுடைய ஆட்டோவில் பலவித வசதிகளை செய்துள்ளார்.
டிவி, எப்எம் ரேடியோ வசதி, வைபை, இன்டர்நெட் கனெக்சன், வார, மாத இதழ்கள், தினசரி நாளிதழ்கள், என அனைத்து வசதிகளும்செய்துள்ளார்.
குறைந்த பட்ச கட்டணம்
அன்னையர் தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர்கள் தினம், காதலர் தினம் என சிறப்பு தினங்களில் இவருடைய ஆட்டோவில் இலவசமாக பயணிக்கலாம். இத்தனை வசதிகள் கொடுத்தும், இலவசமாக ஆட்டோயும் இவர் தினசரி ரூ.1000 சம்பாதிக்கிறார் ஆனாலும் ஐ.டி துறையினரிடம் கூட இவர் குறைந்த பட்சம் வாங்குவது ரு.15 தான்.
அன்பான பயணம்
எல்லோருமே ஆட்டோ அண்ணாதுரையாக இருந்துவிட்டால் சென்னைவாசிகளுக்கு ஆட்டோ டிரைவர்கள் என்றாலே அடாவடிப் பேர்வழிகள் என்ற நிலைமாறி அன்பானவர்கள் என்றாகிவிட மாட்டார்களா? ஆட்டோ பயணம் என்றாலே சங்கடத்திற்கு உரியது என்பதை சந்தோச பயணமாக மாற்றுவார்களா? என்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சிறப்பு முகாம்
உரிமைக்கு குரல் கொடுக்கிறோம், உழைப்பாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று பேட்டி கொடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் இதனை யோசித்ததன் விளைவாக ஆட்டோக்களில் மீட்டர் போட்டு, அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி நாளை முதல் 30ம் தேதி வரையில் சிறப்பு முகாம் நடத்த உள்ளனர்.
பயன் இருக்குமா?
ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படவுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கியமான ரயில் நிலையங்கள், முக்கியமான பஸ் நிலையங்கள் என 50 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
ஆனால், இதனால் சென்னைவாசிகளுக்கு பயன் இருக்குமா என்பது சந்தேகமே...