பரவும் புதிய ஜெ.என் 1 வகை கொரோனா… ஆபத்து அதிகமா?
தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜெ.என் 1 வகை கொரோனா இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்றுவரை 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் மட்டும் 34பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரபல மருத்துவர் ரவீந்திரன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சில நாள்கள் முன்னதாக தனக்குக் காய்ச்சல் இருந்ததாகவும் உடனடியாக அவர் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்ததாக அவர் , "நவீன அறிவியல் மருத்துவத்தின் தடுப்பூசி மிகப் பெரிய பலனைத் தந்துள்ளது. இலேசான உடல்வலி, காய்ச்சல் , தொண்டை வலி மூன்று நாட்கள் இருந்தன.
கொரோனா தொற்று அதிகரிப்பதால், பன்றிக் காய்ச்சலும் சிலருக்கு வருவதால், நண்பர்கள் முகக் கவசம் அணிவது நல்லது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது நல்லது" என்ற ஒரு விழிப்புணர்வு தகவலையும் கூறியுள்ளார்.
புதியதாகப் பரவி வரும் ஜேஎன்1 வகை கொரோனா தொற்று எந்தளவுக்கு ஆபத்தானதா? வீரியம் மிகுந்ததா?
"இந்தவகையான கொரோனாவின் அறிகுறி எனப் பார்த்தால், காய்ச்சல் இருக்கும். தொண்டை வலி இருக்கும். மூக்கில் சளி ஒழுகுதல் இருக்கும். உடல்வலி கூட இருக்கும். இவை எல்லாம் இருந்தால் அது கட்டாயம் ஜேஎன்1 வகை கொரோனாதான்.

இதற்கான சிகிச்சை என்ன? இதுவரை பொதுவான கொரோனா தொற்றுக்கு நாம் என்னவெல்லாம் கடைப்பிடித்தோமோ அதை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டாமல், அறிகுறி தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.
கையை கழுவது, மாஸ்க் அணிவது, இடைவெளியைக் கடைப்பிடிப்பது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற விசயங்களில் மறக்கக் கூடாது.

முன்பே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்தப் புதியவகை கொரோனா தொற்று வருமா? என்று கேட்டால், அதற்கு இதுவரை அறிவியல்பூர்வமான விளக்கங்கள் வெளியாகவில்லை. டபுள்யூஹெச்ஒ அது குறித்து எந்த அறிக்கையையும் இன்னும் வெளியிடவில்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா? என்பதற்கான தரவும் இன்னும் முறையாகக் கிடைக்கவில்லை.
இதில் ஆறுதலான செய்தி என்னவென்றால், முந்தைய கொரோனாவைவிட இதன் வீரியம் குறைவாக உள்ளதாகக் கூறி இருக்கிறார்கள். ஆனால், கேரளாவிலும் ராஜஸ்தானிலும் இந்த வகை கொரோனா தொற்றினால் சிலர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆகவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது." மருத்துவர் கார்த்திகேயன்












Click it and Unblock the Notifications