தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா, போலீஸ் ஆட்சியா? ஹைகோர்ட் நீதிபதிகள் கோபம்.. காரணம் இதுதான்
மதுரை: தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா, காவல்துறை ஆட்சியா என ஹைகோர்ட் மதுரை கிளை, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, போராட்டம் நடத்தியதால் காவல்துறை 92 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஹரிஹரனை கைது செய்த காவல்துறை, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளது. ஹரிஹரனை, ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவர் மனைவி சத்யபாமா கடந்த 20ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி சுவாமிநாதன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

அதிர்ச்சி
24ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு நகலை எடுத்துக்கொண்டு 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு சத்யபாமா சிறை நிர்வாகத்திடம் உத்தரவை கொடுத்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 6 மணிக்கு ஜாமீன் உத்தரவு நகலை கொடுத்த நிலையில் 6.10 மணிக்கு ஹரிஹரன் மீது தேசத்துரோக பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைகோர்ட் கிளையில் விசாரணை
இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில் சத்யபாமா இன்று தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் மீது புதிதாக பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் பஷீர் அஹமது தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கோபம்
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி மனு விவரங்களை எடுத்துரைத்தார். இதை கேட்டறிந்த நீதிபதிகள் கோபமடைந்தனர். உயர்நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அந்த உத்தரவு நகலையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் காவல்துறை வேண்டுமென்றே தேசத் துரோக வழக்கை பதிவு செய்துள்ளது.

யார் ஆட்சி?
இப்போது, தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் ஆட்சியா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் எவ்வாறு சம்மதித்தார்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை கோர்ட்டில் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications