ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து.. கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போகுமா?
சென்னை : வரும் ஜூன் 5ஆம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் திறந்து வைத்திட வருமாறு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜூன் 5ஆம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் விழாவில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவரின் வருகை ஒத்திவைக்கப்பட்டதால் திறப்புவிழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாற்றம் செய்யப்படும் தேதியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications