பாஜக கூட்டணியில் பாமக உள்ளதா?: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
ஈரோடு: பாஜக கூட்டணியில் பாமக இருப்பது பற்றி தலைவர்கள் கூடிப் பேசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மேற்கு மண்டல சட்டசபை தொகுதிக்கான பாஜக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க பாஜக தயாராகிவிட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக வளர்ந்து கொண்டிருப்பதால் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழகத்திற்கு வருகிறார்கள். தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி இன்று துவங்கி 30 நாட்களில் முடிக்கப்படும். தமிழக அரசுக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதிமுக ஆட்சியில் அனைத்து தறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை பாஜக ஆதரித்தாலும் பள்ளிகளை மூடிவிட்டு போராடுவது எல்லாம் தேவையில்லாதது என்றார்.
பாஜக கூட்டணியில் பாமக இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், அது பற்றி தலைவர்கள் கூடிப் பேசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications