எபோலா விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் - தேனி வாலிபரின் ரத்தம் புனேக்கு அனுப்பப்படவில்லை?
சென்னை: எபோலா நோய் அறிகுறிகளுடன் சென்னை வந்ததாகக் கருதப்பட்ட தேனி வாலிபரின் ரத்த மாதிரியை, ஆய்வுக்காக புனே அனுப்பாமல் தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக விட்டு விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எபோலா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுகிறதா என்ற சர்ச்சை உண்டாகியுள்ளது.
அதி பயங்கர எபோலா வைரஸ் காய்ச்சல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்நோய்க்கான குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனான அமெரிக்காவே எபோலா குறித்து ஆடிப் போயுள்ள நிலையில், எபோலா விசயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறையின் அலட்சிய நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எபோலா அறிகுறி...
கடந்த 9ம் தேதி இரவு மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் இருந்து சென்னை வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (26 ) என்ற வாலிபருக்கு எபோலா அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
டிஸ்சார்ஜ்...
உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்திபனின் ரத்தமாதிரி ஆய்வுக்காக புனே அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 15 மணி நேர மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பிறகு பார்த்திபன் ஆரோக்கியமாக உள்ளதாகக் கூறப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரத்தமாதிரி ஆய்வு...
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ரகுநந்தன், ''முதற்கட்ட பரிசோதனையில், 'எபோலா' வைரஸ் அறிகுறி இல்லாததால், அந்த வாலிபரை வீட்டுக்கு அனுப்பி விட்டோம். புனே நகருக்கு அனுப்பியுள்ள ரத்த மாதிரி முடிவு கிடைக்க, 48 மணி நேரம் ஆகும். அது கிடைத்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். தேவைப்பட்டால், தேனியில் உள்ள மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணிப்பர்'' எனத் தெரிவித்திருந்தார்.
முடிவு எங்கே...?
ரகுநந்தனின் கூறியபடி தேனி வாலிபரின் ரத்தமாதிரி புனே அனுப்பப்பட்டிருந்தால், கடந்த 12ம் தேதியே முடிவுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது தொடர்பாக சுகாதாரத் துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
பொது சுகாதாரத் துறை...
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளிடம் கேட்கப்பட்டதற்கு, ''ரத்த மாதிரியை புனே நகருக்கு அனுப்பிய விவரம், பொது சுகாதாரத் துறைக்கு தான் தெரியும்; அங்கு கேட்டுக் கொள்ளுங்கள்,'' எனத் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு செய்யவில்லை...
ஆனால், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, ''கினியாவில் இருந்து வந்த, தேனி மாவட்ட வாலிபருக்கு, 'எபோலா' வைரஸ் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே, அவரிடம் இருந்து ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்காக, புனே நகருக்கு அனுப்பப்படவில்லை,'' எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீண் குழப்பம்...
'எபோலா' வைரஸ் பாதிப்பு எந்த வகையிலும் இந்தியாவில் பரவி விடக்கூடாது' என்ற விசயத்தில் அரசு கவனமாக இருந்தால் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க இயலும். முன்னுக்குப் பின் முரணாக வெளியாகும் இத்தகைய தகவல்களால், மக்களிடத்தில் தேவையில்லாத சந்தேகம், குழப்பம் ஏற்படும் என்பது மறுக்க இயலாதது.
மருத்துவத் தலைநகர்...
அதேபோல், ‘மருத்துவ தலைநகர்' என்று புகழப்படும் சென்னையில் 'எபோலா, பிளேக், ஆந்த்ராக்ஸ்' போன்ற, கொடிய உயிர்கொல்லி வைரஸ், பாக்டீரியா சார்ந்த நோய் பாதிப்புகளை கண்டறியும் வசதி இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
புனே...
பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரிடம் இருந்து, ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்து, #மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கோ, டில்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கோ தான் அனுப்ப வேண்டியுள்ளது.
மானியத்துடன் சோதனை மையம்...
தேவையான கட்டட வடிவமைப்புகள் உள்ள நிலையில், மத்திய அரசின் மானியத்தோடு 5 கோடி ரூபாய் செலவு செய்தாலே, ‘பி.எஸ்.எல். -4 ‘ எனப்படும் கொடிய கிருமிகள் வெளியே செல்லாத பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட சோதனை மையத்தை இங்கேயே அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதில் வேண்டுமானாலும் விளையாடலாம்.. எபோலாவிடம் விளையாடலாமா...?