பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் தைரியமானவர்களா?... ஏன் இந்த தப்பான முன் உதாரணம் பாலா?
Recommended Video

சென்னை : பெண் கெட்ட வார்த்தை பேசினால் அதை வைத்து தான் அவர் தைரியசாலி என்பதை காட்டலாம் என்பது போன்ற ஒரு தப்பான முன் உதாரணத்தை இயக்குநர் பாலா தன்னுடைய நாச்சியார் படமும் சொல்ல வருகிறாரா?
இயக்குனர் பாலா படம் என்றாலே கதையில் தொடங்கி பட ரிலீஸ் வரை அனைத்திலுமே சர்ச்சை தொடங்கிவிடும். இதற்கு நேற்று ரீலிசான பாலாவின் நாச்சியார் டீசரும் விதிவிலக்கல்ல. பாலா படம் என்றாலே அதில் "கவுச்சி" நெடி தூக்கலாகவே இருக்கும். இதை அவரின் எல்லா படத்திலும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
எதார்த்தத்தை காட்டினாலும், திரையில் பார்க்கும் போது அது பலருக்கு முகசுளிப்பையே தந்திருக்கிறது. தமிழ் சினிமா புரட்சியாளர், உழைக்கும் மக்களின் உண்மை வாழ்க்கையை செல்லுலாய்டு திரையில் காட்டுபவர் என்றெல்லாம் பாலா பாராட்டப் பெற்றிருந்தாலும், அவருக்கான தரத்திலிருந்து அவர் அடிக்கடி இறங்கி விடுவது யோசிக்க வைக்கிறது.

எதார்த்தங்களை படமாக்கும் பாலா
இதற்கு முக்கிய காரணம் அவருடைய படத்தில் இடம்பெறும் வசனங்களும், சரளமாக புரண்டோடும் கெட்ட வார்த்தைகளுமே. என்ன தான் நிதர்சனமாக இருந்தாலும் அதை ஏன் படம் முழுவதிலும் வைக்க வேண்டும் என்பது தான் கேள்வி.

பாலாவின் கதைக்களம்
அவன் இவன், தாரை தப்படை போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு இது விளங்கும். பாலாவின் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே அதையும் தாண்டி அதில் இருக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தான் அவருக்கு தொடர் வெற்றியைத் தேடித் தருகின்றன.

தேவையா இந்த வசனம்
விரைவில் வெளியாக இருக்கும் நாச்சியார் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பெண் போலீசாக ஜோதிகா நடித்திருக்கிறார். டீசர் முழுவதும் பின்னணி இசையிலேயே ஓட கடைசியில் ஜோதிகா பேசும் ஒரே ஒரு கெட்ட வார்த்தை சமூக ஊடகங்களில் சென்சேஷனை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தைரியத்திற்கு இது தான் உதாரணமா?
தன்னுடைய கதாபாத்திரம் திடமான போலீஸ் பெண் என்று காட்டுவதற்காக பாலா ஜோதிகாவை வைத்து அந்த கெட்ட வார்த்தையை பிரயோகித்துள்ளாரா? அப்படியானால் ஒரு பெண் போல்ட் அண்ட் ஸ்ட்ராங் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றால் அவர் கெட்ட வார்த்தை பேசினாலே போதும் என்பது தான் இதன் அர்த்தமா, அல்லது போலீஸ்காரர்கள் என்றால் இப்படித்தான் பேசுவார்கள் என்று சொல்ல வருகிறாரா பாலா.

ஏன் பீப் செய்யப்படவில்லை?
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு தான் என்று சொன்னாலும் தமிழகத்தை பொருத்த வரையில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகம். அவ்வாறு இருக்கையில் ஒரு தவறான கருத்தை ஏன் பாலா பெண்கள் பற்றி தன்னுடைய படத்தின் மூலம் சமூகத்தில் திணிக்கிறார். இவையெல்லாவற்றையும் விட அந்த கெட்ட வார்த்தை ஏன் பீப் செய்யப்படவில்லை என்பது தான் அனைவர் மனதிலும் எழும் கேள்வி அப்படி என்ன அந்த வார்த்தைக்கும் நாச்சியார் கதைக்கும் தொடர்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications